படித்ததில் பிடித்தவை!புலி ஒரு ஆளுமையின் குறியீடு

புலி ஒரு ஆளுமையின் குறியீடு. தைரியத்தோட அடையாளம். ”உண்மையில் புலிதான் தனிக்காட்டு ராஜா. காட்டுல அது வெச்சதுதான் சட்டம். அத்தனை ஆக்ரோஷமா இருக்கும் புலி, உண்மையில் ரொம்பக் கூச்ச சுபாவி. தனிமை விரும்பியும்கூட. தனக்குனு ஒரு எல்லையை வகுத்துக்கிட்டு அதுக்குள்ள உலா வர்றது தான் புலியோட இயல்பு. ஒரு புலி அப்படிச் சுதந்திரமா உலா வர, 40 சதுர கி.மீ. பரப்புள்ள அடர்த்தியான வனம் தேவை. இப்போ அதோட எல்லைக்கு உள்ளே நாம அத்துமீறி நுழையுறதாலேயே, புலிகள் அழிவோட விளிம்புல இருக்குங்க
புலிகளின் அழிவுங்கிறது உண்மையில் காடுகளோட அழிவு மட்டும் இல்லை… அது ஒரு நாட்டோட வளத்தின் அழிவு. புலி ஒரு ஆளுமையின் குறியீடு. தைரியத்தோட அடையாளம். உயிர்ச் சங்கிலியில் ஒரு கண்ணி!” - களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்துக்கு நான் கானகப் பயணம் சென்றிருந்தபோது அதன் இயக்குநர் வெங்கடேஷ் உணர்ச்சியும் உருக்கமுமாகப் பேசினார்.
களக்காடு முண்டந்துறையில் சென்ற வாரம் புலிகள் கணக்கெடுப்பு நடந்தது. அதில் கலந்துகொண்ட வாலன்டியர்களுக்குத்தான் இந்தப் பாடம். காட்டுக்குள் ஒரு புலியை நேருக்கு நேர் பார்ப்பது என்பது, ஜெயலலிதாவும் கருணா நிதியும் ஒரே நேரத்தில் சட்டசபைக்கு வந்து, இன்முகத்தோடு பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொள்வதற்கு இணையான அபூர்வ நிகழ்வு. ”ஏழு வருஷமா காட்டுக்குள்ளே சுத்திட்டு இருக்கேன். ஒரே ஒரு முறை புலியோட உறுமல் சத்தத்தை மட்டும்தான் கேட்டிருக்கேன்!” என்கிறார் களக்காட்டின் வனக் காவலர் ஒருவர். புலியின் நேரடி தரிசனத்துக்காகப் பலர் வருடக் கணக்கில் காட்டில் தவம் கிடக்க, ஸ்ரீவில்லிபுத்தூர் மலையில் ‘ச்சும்மா’ ட்ரெக்கிங் போன கல்லூரி மாணவர்கள் சிலர் புலியை நேருக்கு நேர் பார்த்து, அந்த உயிர் பயத்திலும் மொபைலில் போட்டோ எடுத்துத் திரும்பிய கதையும் உண்டு.

மனிதர்களின் வியர்வை வாடையை உணர்ந்ததுமே புலிகள் அந்த இடத்தைக் காலி செய்துவிடும். பிறகு எப்படி அவற்றைக் கணக்கெடுப்பது? நீர்நிலைகளில் பதிந்து இருக்கும் கால்தடம், புலியின் எச்சம், மரத்தில் இருக்கும் நகக் கீறல்கள் ஆகியவற்றை வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும். காட்டில் யானைக்கு அடுத்து புலியின் கால்தடம்தான் பெரிதாக, அழுத்தமாக, அழகாகப் பதிந்திருக்கும். அதை அளந்து, அதில் ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ் மாவை ஊற்றி அச்சு எடுப்பார்கள்.

தன் எல்லையைப் பிற புலிகளுக்குத் தெரிவிப்பதற்காக, நகத்தால் மரங்களில் பிறாண்டி வைத்திருப்பார் மிஸ்டர் புலியார். அல்லது உச்சா அடித்து இருப்பார். ஒரு புலியின் உச்சா வாடையைப் பிற புலிகள் மிக எளிதாக, தொலைவில் இருந்தே கண்டுபிடித்து விலகிச் சென்றுவிடும். இது புலிகளுக்கு இடையிலான ரகசிய ஒப்பந்தம். ஒருவேளை இரண்டு ஆண் புலிகள் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டால், சந்தேகமே வேண்டாம்… அடிதடி சண்டைதான். பலவீனமான புலி மல்லாக்கப் படுத்து தன் தோல்வியை ஒப்புக்கொள்ளும் வரை, பலசாலி ஓயமாட்டார்.
 



கணக்கெடுப்புப் பயணம் முழுக்கப் புலிகளின் இருப்பு மற்றும் இயல்பு குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டே வந்தார் ரேஞ்சர் ஜெபஸ். காலடித் தடத்தைவைத்தே ஒரு புலி ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்துவிடலாம். பெண் புலியின் தடத்துக்கு அருகே புலிக் குட்டிகளின் தடங்களும் இருக்கின்றன.
ஆண் புலி தனிமை விரும்பிதான். ஆனால், ஆயுசுக்கும் தனித்தே வாழ்ந்தால், இனம் எப்படிப் பெருகும்? அங்கேதான் மிஸ்டர் புலியார் தன் ‘தேவை’களுக்காக பெரிய மனசு பண்ணி, பெண் புலியைத் தன் எல்லைக்குள் வாழ அனுமதிப்பார். ஆனால், குட்டி பிறந்த உடனே ஆண் புலியார், பெண் புலியைக் கழற்றி விட்டுவிடுவார். பிறந்து சில வாரங்கள் வரை பார்வைத் திறன் இல்லாமல் இருக்கும் குட்டியைப் பாறை இடுக்கில் உள்ள புதர்களில் மறைவாகவைத்து வளர்க்கும் பெண் புலி.


செந்நாய்கள், சிறுத்தைகள் எனப் புலிக் குட்டியை வேட்டை ஆடப் பல எதிரிகள் இருந்தாலும், மற்ற ஆண் புலிகளிடம் இருந்துதான் குட்டியைக் காப்பாற்ற தாய் அதிகம் போராட வேண்டும். ஏனென்றால், குட்டி இறந்து விட்டால், பெண் புலி அடுத்த ஐந்தே மாதங்களில் இனப்பெருக்கத்துக்குத் தயாராகிவிடும். இதனால், ஏரியாவில் சும்மா அலையும் மற்ற ஆண் புலிகள் குட்டிகளைத் தேடி வந்து கதையை முடித்துவிட்டு, அந்தப் பெண் புலியை மீண்டும் அம்மா ஆக்கும் முயற்சிகளில் இறங்கும்.
இதனால், அதிகபட்ச எச்சரிக்கை உணர்வுடன் இரண்டு வருடங்கள் கஷ்டப்பட்டு குட்டிகளை வளர்க்கும் தாய்ப் புலி. பெரும்பாலும் மனிதர்களைக் கண்டால், சத்தமின்றி விலகிச் செல்வதுதான் புலிகளின் பழக்கம். ஆனால், குட்டியோடு இருக்கும் தாய், மனிதர்களைப் பார்த்தால் தன் குட்டியைக் காப்பாற்றும் நோக்கத்தோடு எதிர்த் தாக்குதலில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம்.
அதனால், காட்டில் புலிக் குட்டியைப் பார்த்தாலே அனுபவம் உள்ளவர்கள் பதறி விலகி ஓடுவார்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்க்கும் குட்டிக்கு இரண்டு வயதானதும் தாய்ப் புலியே குட்டிகளைத் துரத்தி விட்டுவிடும். வேட்டையாடும் தகுதியை வளர்த்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் கட்டாயத் தனிக்குடித்தனம் அது!
காலடித் தடங்களை வைத்து ஒரு பகுதியில் புலியின் நடமாட்டத்தைக் கணித்ததும் அங்கே சென்ஸார் செட்டப்போடு தானியங்கி கேமராவைப் பொருத்துகிறார்கள். இருபுறமும் சென்ஸார் பொருத்திய பாதையைப் புலி கடக்கும்போது, கேமரா தானாகவே இயங்கி ஃப்ளாஷ் அடித்துப் படம் பிடிக்கும். இந்த உத்திக்கு ‘கேமரா ட்ரேப்பிங்’ என்று பெயர். இதிலும் பல வேடிக்கை விநோதங்கள் நடக்கும்.

திடீரென ஃப்ளாஷ் வெளிச்சம் மின்னுவதால் கோபத்தில் காட்டு யானைகள் கேமரா செட்டப்பை ஒரே அடியில் பிடுங்கி வீசிவிடும். அந்தப் பாதையில் கடக்கும் மயில் ஃப்ளாஷை மின்னல் என்று நினைத்து, தோகை விரித்து ஆட ஆரம்பித்துவிடும். பதிவாகும் படங்கள் முழுக்க மயிலாகவே இருக்கும். குரங்கு என்றால் இன்னும் கேட்கவே வேண்டாம். ஃப்ளாஷ் வெளிச்சத்துக்கு உற்சாகமாகி மீண்டும் மீண்டும் கேமரா முன் வந்து நின்று சளைக்காமல் போஸ் கொடுத்துக்கொண்டே இருப்பார் குரங்கார்.

இரண்டு, மூன்று மலைகளைக் கடந்து நடந்து புலிப் படங்களை எதிர்பார்த்து, கேமராவின் மெமரி கார்டைச் சோதித்தால், பதிவான படங்கள் முழுக்கக் குரங்குச் சேட்டைகளாக இருந்தால், ஒரு வனக் காவலருக்கு எவ்வளவு கொலை வெறி வரும்?

அன்றைய இரவில் கோதையாற்று நீர்த்தேக்கம் அருகில் எங்களை கேம்ப் ஃபயர் போட்டுத் தங்கவைத்தார்கள். ”பயப்படாதீங்க… நெருப்புன்னா எல்லாப் பயலுகளும் பயப்படுவானுங்க. புகை ஸ்மெல் வந்ததுமே பெரியவன் (யானை) ஒரு கி.மீ-க்கு அப்பால போயிருவான்!” என்று தைரியம் கொடுத்தார் வனக் காவலர் ஜான்.

அவருக்கு புலி, எலி எல்லாமே பயலுவதான். ”ஆனா… இந்த சிறுத்தைப் பய மட்டும் நெருப்பைப் பார்த்தா தேடி வருவான். அவுக வாயில உள்ள புழுவைக் கொல்றதுக்காக வந்து நெருப்புல ‘ஆ’ காட்டுவாக!” என்றார். ”ஆ காட்டுனா பரவாயில்லை. நம்மகிட்ட வந்து ஒரு காட்டு காட்டுனா என்ன பண்றது?” என்று எங்களிடம் எழுந்த கேள்விக்கு மையமாகச் சிரித்துவைத்தார். அதற்குப் பிறகு தூக்கம் பிடித்திருக்கும் என்றா நினைக்கிறீர்கள்?

காலையில் கேம்ப் ஆபீஸுக்குத் திரும்பி வந்தபோது, முதல்முறையாக வாழ்க்கையின் மீது ஆசை பிறந்தது

நன்றி :விகடன்

Comments

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

எதற்காக வாசிப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்